இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பையும் வளமான முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த தேசிய இயக்கம் 2026 மார்ச் 8 ஆம் திகதி அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த இயக்கம், “The Power of Sri Lankan Women to Impact, Inspire, and Influence Youth in Sri Lanka” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற 2026 சர்வதேச மகளிர் தின வட்ட மேசை மாநாட்டுடன் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்வு, இவ்வாண்டு தனது 25 ஆண்டுகால சேவையை கொண்டாடும் Shyamala School of Art மற்றும் இலங்கை இளைஞர்களுக்காக 18 ஆண்டுகள் சேவை செய்து வரும் Unity Mission Trust ஆகியவற்றின் கூட்டாண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. “HerProgress.OurProsperity.” என்ற தலைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முயற்சி, அடித்தட்டு நிலைகளில் இருந்து சமூக மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பெண்கள் வழிநடத்தும் நீண்டகால, கட்டமைக்கப்பட்ட தேசிய இயக்கத்தின் ஆரம்பமாகும்.
சின்னமாகக் கொண்டாடப்படும் நிகழ்வுகளைத் தாண்டி, பெண்கள் தங்களின் நாளாந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களைத் தீர்க்கும் நோக்கில் இந்த முயற்சி அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் வளமான முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக சமூக மனப்பான்மையை மாற்றுதல், கொள்கை விவாதங்களை ஊக்குவித்தல் மற்றும் சமூகங்களை செயலில் ஈடுபடுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அதிகாரபூர்வ தொடக்க நிகழ்வில் பல்வேறு தொழில்முறை, கல்வி, தொழில்முனைவு மற்றும் நிறுவனத் தலைமை நிலைகளில் உள்ள 50 திறமையான பெண்கள் தலைவர்கள் பங்கேற்றனர். அதேபோல் Unity Mission Trust அமைப்பின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தேசிய இளம் பெண் தலைவர்களும் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் வலுப்படுத்துவதன் மூலம் அவர்களின் முன்னேற்றம் நாட்டின் வளமாக மாறும் என்ற ஒரே நோக்குடன் அனைவரும் ஒன்றிணைந்தனர்.
இந்த நீண்டகால முயற்சி, பாடசாலைகள், சமூகங்கள், அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து நாடு முழுவதும் சமூகத்தின் அனைத்து தரப்புகளுக்கும், முக்கியமாக பின்தங்கிய மற்றும் குறைவாக பிரதிநிதித்துவம் பெறும் பகுதிகளில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு, இந்த செய்தியை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்று கட்டங்களைக் கொண்ட நீண்டகால திட்டத்தின் முதல் கட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, தேசிய அளவில் அவசர கவனம் தேவைப்படும் ஏழு முக்கிய முன்னுரிமை துறைகள் அறிவிக்கப்பட்டன. அவை தேசிய அளவிலான உரையாடல் மற்றும் நடவடிக்கைகளுக்கு திசை நிர்ணயமாக அமைகின்றன.
ஏழு முன்னுரிமை துறைகள்:
- பெண்கள் மற்றும் சிறுமிகளின் உடல் மற்றும் மனநல பாதுகாப்பு மற்றும் சுகாதார தேவைகள் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பெண்களின் மரியாதை, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை மதிக்க கல்வி வழங்குதல்.
- பெண்களின் பாதுகாப்பிற்கான சட்ட வழிமுறைகள் மற்றும் அவற்றை எவ்வாறு அணுகுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- வீடு, பாடசாலை, பல்கலைக்கழகம், அலுவலகம், வேலைத்தளம் மற்றும் பொதுத் தளங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தொல்லை மற்றும் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கும் அமைப்புகளை வலுப்படுத்துதல்.
- பெண்களின் உடல் மற்றும் மூளை ஆரோக்கியம்: முழுமையான நலனுக்காக மாதவிடாய் வறுமை மற்றும் சுகாதார பிரச்சினைகளை தீர்க்குதல்.
- பெண்கள் மற்றும் சிறுமிகளை டிஜிட்டல் துஷ்பிரயோகம், இணைய குற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப அடிமைத்தனத்திலிருந்து பாதுகாத்தல்.
- நிதி கல்வி, தொழில்முனைவு, சுயதொழில் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை சவால்களை கருத்தில் கொண்டு வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்தி பொருளாதார சுதந்திரத்தை வலுப்படுத்துதல்.
இந்த தொடக்க நிகழ்விற்குப் பிறகு, “Safeguarding and the Thriving of Women and Girls in Sri Lanka” என்ற கருப்பொருளின் கீழ் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் ஒவ்வொரு முன்னுரிமை துறையிலும் உள்ள முக்கிய சவால்களை ஆராய்ந்து, சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் கொள்கை தளங்கள் வழியாக செயல்படுத்தக்கூடிய குறுகிய கால மற்றும் நீண்டகால நடைமுறை பரிந்துரைகளை உருவாக்கினர்.
இந்த மாநாட்டிற்கு Shyamala Pinto-Jayawardena தலைமை தாங்கினார். Sasha Pinto-Jayawardena நிகழ்வை ஒழுங்குபடுத்தினார். அமர்வு தலைவர்களாக Dr. Ransirini De Silva, Premila Paulraj, Vijula Arulampalam, Dr. Nadee Dissanayake, Dr. Kumarangi Vithanage, Michelle Herft மற்றும் Lakmali Hapuarachchi ஆகியோர் செயல்பட்டனர். நிகழ்ச்சியின் அதிகாரபூர்வ தொகுப்பாளராக Kshyahla Pinto-Jayawardena பணியாற்றினார்.
மாநாட்டின் முடிவில், இலங்கையின் பெண்களின் ஒருங்கிணைந்த குரலாக மக்களிடம் வழங்கப்படும் ஒரு அதிகாரபூர்வ கையெழுத்திடப்பட்ட அறிவிப்பு உருவாக்கப்பட்டது. இதில் ஏழு முன்னுரிமை துறைகளில் உள்ள முக்கிய சவால்கள் மற்றும் நடைமுறை தீர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குடும்பம், கல்வி, பொதுத் தளங்கள் மற்றும் நிறுவனங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், மரியாதை மற்றும் கண்ணியத்தை வலுப்படுத்தவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் இந்த அறிவிப்பு ஒருங்கிணைந்த நடவடிக்கையை அழைக்கிறது.
இந்த முயற்சியின் முக்கிய அம்சமாக, நிகழ்வில் பங்கேற்ற 50 தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் தொடர்ந்த ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்கது. பெண்கள் மற்றும் சிறுமிகளின் நலனுக்காகவும், நீண்டகால சமூக முன்னேற்றத்திற்காகவும், இலங்கை ஒரு வளமான நாட்டாக வளர்வதற்கும் இந்த இயக்கத்தை அவர்கள் தொடர்ந்து முன்னெடுக்க உள்ளனர்.
